Pages

Saturday, 31 March 2012

வேம்பாகிய  நான் 
ஜென்மங்கள் உண்மையா?
ஆமெனில் ஓராசை. 
அடுத்த ஜென்மமொன்றிருந்தால் 
மரமாவேன்.
நான் வேம்பாவேன். 

தகிக்கும் வெயில்,
வேர் நனைக்கும் மழை,
அடிக்கும் புயல்,
கொட்டும் பனி,
எனைக் கட்டி அணைக்கும் காலங்கள்.
கண்கள் மூடி 
வேர்கள் இறுக்கி
பேரின்பம் நான் காணுவேன். 

மழை வந்தால் சிலிர்ப்பேன். 
வெயிலானால் மவுனிப்பேன்.
பனியானால் இரவெலாம் 
வெடவெடத்து நடுங்குவேன். 

ஆணிஎடுத்துக் கீறிப்பார். 
பால் வழியும் என் மார்பு. 
கோடரி எடுத்து வெட்டிப் போ. 
உத்திரமாவேன், நிலையாவேன். 

பறவைகள் என்னில் கூடுகட்டும்.
எச்சமிடும், அலகால் கீறும். 
அதன் கால் விரல் நகங்கள் 
என் மரப்பட்டை கவ்வும். 
கூச்சத்தில் உடல் சிலிர்ப்பேன்.
கிளைகள் ஆட்டுவேன். 
பூக்களாய் பூமியில் உதிர்ப்பேன். 

ஆயிரம் கரங்கள் நீட்டி
எட்டுத்திசையிலும் 
கிளைகள் பரப்புவேன்.
அத்தனை கரங்களாலும் 
பூமி அணைப்பேன்,
அள்ளித் தருவேன்.  
வாழ்க்கை

வாழ்வு துறந்து 
மரணம் விழைய
மனம் துடிக்கும் கணங்களில் 
கட்டாயமாய் வாழச் சொல்லும் 
பூத்து குலுங்கும் ரோஜாக்கள்.

புறப்படுகையில் டாடா சொல்லும் 
எதிர் வீட்டுக் குழந்தை. 

எண்பது வயதில் கூவி விற்கும் 
கீரைக்கார பாட்டி

ஏகாந்தமாய் படுத்துக்கொண்டு 
பால் கொடுக்கும் தாய்ப்பன்றி. 

வண்டியில் லைட் எரிவதாய்
சைகை செய்யும் பாதசாரி. 

ரயில் பயணங்களில் 
கையசைக்கும் ரோட்டோரச் சிறுவர்கள். 

மழைக்காலத்தில் தார் ரோட்டில்
பூத்திருக்கும் பெட்ரோல் கோலம். 

தொலைபேசியைக் காதில் வைத்துப் 
பேசாமலேயே இருக்கும் காதலர்கள்.

வாழ்க்கைதான் எத்தனை அழகானது. 



என் மரணத்திற்குப் பின்பு 

வீட்டிலும் முற்றத்திலும் கூட்டம்.
கதவுகள் விரியத் திறந்திருக்கும்.
ஆண்களெல்லாம் வாசலில்,
பெண்கள் வீட்டினுள்.

எளிதில் அடையாளம் காண 
வாசலில் பந்தல். 
பிளாஸ்டிக் சேர்கள்.
அவ்வப்போது விட்டு விட்டு 
எழும் ஒப்பாரி. 

தெருமுனைவரை 
வெற்றிலை எச்சில் தெறிக்க 
கதைத்துக்கொண்டு வரும் கூட்டம்.
வாசல் வந்ததும் கதறி உள்வரும். 
பின் காபி அருந்தும். 

எப்படிப் போனதென்று கேட்பவர்களிடம் 
என் சாவு நேர்ந்த விதம் பற்றி 
மெல்லிய குரலில் சொல்வான் தம்பி. 
எனக்குப் பிரியமான 
 சிகப்பு ரோஜாக்களை 
உடலெங்கும் நிறைத்து வைப்பான். 
என்னிரு பாதங்களையும் 
பற்றிக் கதறுவாள் என் மகள். 
என் பிணத்தின் முலைகளிலும் 
பால் சுரக்கும். 

உறவினர்களுக்கும்
 நண்பர்களுக்கும் 
ஒரு எளிய விண்ணப்பம். 
தயவுசெய்து யாரும் 
ஊதுபத்தி ஏற்ற வேண்டாம். 
குளிப்பாட்டியபின் 
முகம் நிறைய 
மஞ்சள் அப்பாதீர்கள். 
தோடுகளையும் 
மோதிரங்களையும் 
மெல்லக் கழற்றுங்கள். 
கால் விரல் கட்ட.
மெல்லிய துணி உபயோகியுங்கள். 

தினமும் என்னுடன் உறங்கும் 
ஜன்னல் நிலாவுக்கு
 சேதி அனுப்புங்கள்
இனி வந்து எனை தேட வேண்டாமென. 

செம்பருத்திக்கு 
தினமும் 
நீரூற்ற மறக்காதீர்கள்.
என் மரணம் 
அவள் 
அறிய வேண்டாம்.