வேம்பாகிய நான்
ஜென்மங்கள் உண்மையா?
ஆமெனில் ஓராசை.
அடுத்த ஜென்மமொன்றிருந்தால்
மரமாவேன்.
நான் வேம்பாவேன்.
தகிக்கும் வெயில்,
வேர் நனைக்கும் மழை,
அடிக்கும் புயல்,
கொட்டும் பனி,
எனைக் கட்டி அணைக்கும் காலங்கள்.
கண்கள் மூடி
வேர்கள் இறுக்கி
பேரின்பம் நான் காணுவேன்.
மழை வந்தால் சிலிர்ப்பேன்.
வெயிலானால் மவுனிப்பேன்.
பனியானால் இரவெலாம்
வெடவெடத்து நடுங்குவேன்.
ஆணிஎடுத்துக் கீறிப்பார்.
பால் வழியும் என் மார்பு.
கோடரி எடுத்து வெட்டிப் போ.
உத்திரமாவேன், நிலையாவேன்.
பறவைகள் என்னில் கூடுகட்டும்.
எச்சமிடும், அலகால் கீறும்.
அதன் கால் விரல் நகங்கள்
என் மரப்பட்டை கவ்வும்.
கூச்சத்தில் உடல் சிலிர்ப்பேன்.
கிளைகள் ஆட்டுவேன்.
பூக்களாய் பூமியில் உதிர்ப்பேன்.
ஆயிரம் கரங்கள் நீட்டி
எட்டுத்திசையிலும்
கிளைகள் பரப்புவேன்.
அத்தனை கரங்களாலும்
பூமி அணைப்பேன்,
அள்ளித் தருவேன்.